மாதவரம், ஜூன் 9: சோழவரம் ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது, நீரில் மூழ்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சோழவரம் அடுத்த காரனோடை, நாரணம்பேடு லிங்கம் நாடார் தெருவை சேர்ந்தவர் கோபி ராம் (16), அதே பகுதியில் கேன் தண்ணீர் போடும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் சோழவரம் ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கோபி ஸ்ரீராம், எதிர்பாராத விதமாக திடீரென நீரில் மூழ்கி மாயமானார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உடனே சோழவரம் காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் மூழ்கிய பொருட்களை தத்ரூபமாக காண்பிக்கும் அண்டர் வாட்டர் ஸ்கேனர் கருவியின் உதவியுடன், வாலிபரை கண்டறிந்து சடலமாக மீட்டனர்.
தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
