×

அங்கன்வாடி குழந்தைகளை கோணிப்பையால் மூடி அச்சுறுத்திய பணியாளர் கைது

 

தென்காசி: பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடி குழந்தைகளை கோணிப்பையால் மூடி அச்சுறுத்திய பணியாளரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ரஞ்சித்சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம், வென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் வென்னிமலை மற்றும் சுற்றுப்புறத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், தங்களது குழந்தைகளை அடிப்படை கல்வி கற்க அனுப்பி வைக்கின்றனர். இந்த அங்கன்வாடி மையம் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளான நேற்று அங்கன்வாடிக்கு வந்த குழந்தைகள் இடைவிடாமல் அழுதபடி இருந்தன.

இதனால் அங்கு பணியிலிருந்த பெண் ஊழியர் ஒருவர் ஆத்திரப்பட்டு குழந்தைகளை அதட்டியதோடு, அவர்களை மிரட்ட பிளாஸ்டிக் கோணிப்பையால், அந்தக் குழந்தைகளை கடத்துவது போல் மூடியுள்ளார். இதனால் அந்த குழந்தைகள் இன்னும் பீதியடைந்து அலறத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து சில பெற்றோருக்கு தகவல் தெரிய வரவே, கலெக்டரிடம், அங்கன்வாடி பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதற்கிடையே குழந்தைகளை பிளாஸ்டிக் கோணிப்பையால் மூடி கடத்துவது போல் பெண் பணியாளர் அச்சுறுத்திய வீடியோ, சமூக வலை தளங்களிலும் பரவியது. இதையடுத்து தென்காசி கலெக்டர் ரஞ்சித்சிங், அங்கன்வாடி மையத்தின் பெண் ஊழியரை நேற்று ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Anganwadi ,Tenkasi ,Ranjith Singh ,Pavurchatram ,Anganwadi center ,Vennimalai ,Murugan Temple ,Pavurchatram, Tenkasi district ,Vennimalai… ,
× RELATED வாலிபரை அடித்து கொன்று கிணற்றில் சடலம் வீசிய கும்பல்