×

மன்னார்குடி அடுத்த கட்டக்குடியில் தேசிய அளவிலான ஆண்கள் கபடி போட்டி; அரியானா ஸ்டீலர்ஸ் அணி சாம்பியன்

 

மன்னார்குடி: மன்னார்குடி அடுத்த கட்டக்குடியில் நடந்த அகில இந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டிகள் மின்னொளி உள்ளரங்கில் கடந்த மூன்று தினங்களாக பகல் இரவு ஆட்டமாக நடந்தது.

கட்டக்குடி விளையாட்டு கழகம் நடத்திய இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 23 முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடின. லீக் மற்றும் நாக் – அவுட் முறைகளில் நடந்த போட்டிகளின் இறுதி ஆட்டம் நேற்று இரவு நடந்தது. ஆட்டத்தை எம்எல்ஏ எஸ் காமராஜ் தொடங்கி வைத்தார்.

இதில், அரியானா ஸ்டிலர்ஸ் அணி, ரைசிங் புல்ஸ் பெங்களூரு அணியை 437 என்கிற புள்ளி கணக்கில் வென்று ரூபாய் 5 லட்சம் ரொக்கம் மற்றும் கோப்பையுடன் சாம்பியன் பட்டத்தை வென்றது. ரைசிங் புல்ஸ் பெங்களூர் அணி ரூபாய் மூன்று லட்சம் ரொக்கம் மற்றும் கோப்பையுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ் தலைவாஸ் மற்றும் உபி யோதா அணிகள் தலா ரூபாய் 1.50 ரொக்கத்துடன் மூன்றாம் இடத்தை பெற்றனர்

தொடர்ந்து கட்டக்குடி விளையாட்டு கழக செயலாளர் எஸ் பி எம் சுரேஷ் குமார் தலைமையில் நடந்த பரிசளிப்பு விழாவில், மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி கணேசமூர்த்தி, தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக மாநில அமைப்பு செயலாளர் ராஜ ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினர்.

மின்னொளி அரங்கில் அரியானா ஸ்டீலர்ஸ், ரைசிங் புல்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தை காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் இளைஞர்கள் பெண்கள் கபடி ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் கூடியதால் கட்டக்குடி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

 

Tags : Mannarkudi ,kabadi ,Kathakudi ,Ariana Steelers ,All India ,Kabaddi ,Thiruvarur District ,Kathakudi Government High School Playground All ,India ,
× RELATED நார்வே செஸ் கார்ல்சனிடம் வீழ்ந்த...