தண்டராம்பட்டு, மே 28: சாத்தனூர் பகுதியில் சூறைக்காற்றால் மரம் முறிந்து விழுந்து வீடு சேதமடைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். அதேபோல் நேற்று முன்தினமும் 105.8 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாத்தனூர் அணை பகுதியில் 44 மி.மீ. மழை பதிவானது. சூறை காற்றால் மா, வாழை மற்றும் புளியமரங்கள் முறிந்த விழுந்தது. அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சியில் புளியமரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயமணி நேற்று காலை மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
