×

திருவொற்றியூரில் தொடர் மின்வெட்டு: மின்வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், எண்ணூர், மணலி போன்ற இடங்களில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் ஒரு மணி முதல் 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் மின் தடை பிரச்னையை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மின் நிலைய அலுவலகத்திற்கு சென்று மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்நிலையில் திருவொற்றியூர் விம்கோ நகர், பாரத் நகர், பாரதியார் நகர், அம்பேத்கர் நகர், ஸ்ரீரங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே பகல் வேளைகளில் மின்வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று இரவும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஆனால் மின்வாரிய ஊழியர்கள் முறையான பதில் கூறாததால் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த செந்தில்குமார் எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தார். பின்னர் மின்வாரிய அதிகாரியிடம் பேசியதை தொடர்ந்து மின் துண்டிப்பு சரி செய்யப்பட்டது. இதனால் வள்ளலார் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `கடந்த சில தினங்களாக எங்கள் பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் வீட்டில் தூங்க முடியவில்லை. இப்பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் செய்தால் யாரும் போன் எடுப்பதில்லை. எடுத்தாலும் பிரச்னையை சரி செய்ய முன்வருவதில்லை. கேட்டால் ஆட்கள் குறைவாக உள்ளனர் என்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

Tags : Thiruvotripur ,Thiruvotiyur ,Tolur ,Manali ,
× RELATED பசுமை எரிசக்தி கழக ஒதுக்கீட்டில் விதிமீறல்: 2 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்