ஐதராபாத்: ஐதராபாத்தில் ஸ்பா மையத்தில் வேலை செய்த இளம்பெண்ணை அவரது கணவரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் கவாடிகுடா பகுதியில் உள்ள ஸ்பா (அழகு நிலையம்) ஒன்றில் பங்கி டெபோரா (25) என்பவர் பியூட்டிஷியனாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று தனது வழக்கமான பணியில் இருந்தபோது, அவரது கணவர் ராஜு (30) என்பவர் திடீரென உள்ளே புகுந்தார்.
ஆட்டோ டிரைவரான ராஜு, கையில் கூர்மையான கத்தியுடன் மிகவும் ஆக்ரோஷமாக வந்துள்ளார். ஊழியர்கள் உஷாராவதற்குள், டெபோராவை ஒரு மூலையில் மடக்கிய ராஜு, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டெபோராவை சரமாரியாகக் குத்தினார். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து பார்த்துக் கொண்டிருக்க, பலத்த காயமடைந்த டெபோரா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த வேகத்தில் ரத்தக் கறை படிந்த கத்தியுடன் வெளியே ஓடிய ராஜு, தனது பைக்கில் தப்பிச் சென்றார். அவரது இந்த வெறிச்செயலை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், டெபோரா மற்றும் ராஜு இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. மனைவியின் நடத்தையில் ராஜு சந்தேகம் அடைந்திருந்ததே இந்த கொடூரக் கொலைக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் பிரேத பரிசோதனை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். ஸ்பாவில் இருந்த சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. ராஜு மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ராஜுவை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.
