சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஆறாத வடுவாகவும், உலகத் தமிழினத்தின் மனசாட்சியை உலுக்கிய துயரமாகவும் நிலைத்துவிட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள். தமிழீழ விடுதலைக் கனவைச் சிதைக்க, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான மனிதவேட்டையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட அந்த கருப்பு தினத்தை நினைவுகூரும் வேளையில், உயிர்நீத்த அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
ஈழத்தில் நடந்தது சாதாரண உள்நாட்டுப் போர் அல்ல; அது திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலை. இந்த கொடூரத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமானால், இலங்கை அரசு தனது போர்க்குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஒரு ‘பன்னாட்டு நீதி விசாரணை’ நடத்தப்பட வேண்டும் என்பதும், அதில் போர் குற்றவாளிகள் முறையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாகும்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்தப்பட்ட ரத்தம் வீண் போகாது. ஈழ தமிழர்கள் இழந்த நிலத்தையும், உரிமையையும் மீட்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சி உலகத்தமிழர்களோடு தோளோடு தோள் நின்று போராடும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
