×

கிருஷ்ணகிரி அருகே மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் அவரது தந்தைக்கு அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  கிருஷ்ணகிரி அருகே 14 வயதுடைய மாணவர் ஒருவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 6 மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்த மாணவர் வசித்து வந்த வீட்டின் அருகில், 10ம் வகுப்பு படித்த மற்றொரு மாணவி இருந்து வந்தார். பள்ளி இடைநின்ற மாணவனின் வீட்டிற்கு அவரது நண்பர்களான, அவருடன் படித்த 2 பேர் அவ்வப்போது வந்து சென்றுள்ளனர்.

அவர்கள் அருகில் உள்ள வீட்டில் மாணவி இருப்பதை பார்த்து மாணவரிடம் விசாரித்துள்ளனர். பின்னர் அந்த மாணவர், அந்த மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐ.டி., பேஸ்புக் ஐ.டி. மற்றும் செல்போன் நம்பர் ஆகியவை தனக்கு தெரியும் என கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் அவரது புகைப்படங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், 3 பேரும் சேர்ந்து போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை உருவாக்கி அதன் மூலம் மாணவிக்கு ரெக்கியூஸ்ட் கொடுத்துள்ளனர். பின்னர், மெசேஜ் மூலமாக மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும், மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கு அனுப்பியுள்ளனர். அந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், ஆடையின்றி வீடியோ, போட்டோ எடுத்து அனுப்ப சொல்லியுள்ளனர். மாணவியும் பயந்துபோய் அவ்வாறு எடுத்து அந்த போலி ஐ.டி.க்கு அனுப்பியுள்ளார். அதை பதிவிறக்கம் செய்த மாணவர்கள், மாணவியின் தந்தை இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை தேடியுள்ளனர்.

அவருக்கு அக்கவுண்ட் இல்லாததால், அவரது செல்போன் எண்ணின் வாட்ஸ் அப்புக்கு மாணவியின் ஆடையில்லாத வீடியோ, படங்களை அனுப்பி வைத்துள்ளனர். அதனை சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால், அதிர்ச்சிக்குள்ளான மாணவியின் தந்தை, அந்த எண் யாருடையது என்று பார்த்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த மாணவரின் செல்போன் என தெரியவந்தது.

அவரிடம் கேட்டபோது தனது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில், போலீசார் விசாரித்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர், சேலம் கூர்நோக்கு மையத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Krishnagiri ,
× RELATED வீட்டுக்குள் புகுந்து மாணவிக்கு தவெக...