கவுகாத்தி: அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி, மொத்தமுள்ள 126ல் 102 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இதனிடையே, அசாம் மாநிலத்துக்கான மத்திய பார்வையாளர்களாக ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டா, அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓரிரு நாளில் பாஜவின் மத்திய பார்வையாளர்கள் கவுகாத்திக்கு வருவார்கள் என்றும், அதன் பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஹிமந்த பிஸ்வா சர்மாவே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக மாநில பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசு பதவியேற்பு விழா வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்தார். புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக பதவியில் தொடருமாறு ஆளுநர் கேட்டு கொண்டு உள்ளார்.
