நன்றி குங்குமம் தோழி
பூசணிக்காய் வாங்கி சமையல் செய்துவிட்டு அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுவோம். பூசணி விதைகளை நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் நம் உடலுக்கு நன்மையை தரும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது. இதை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பல வகையான பலன்கள் நமக்கு கிடைக்கும்.
* நல்ல தூக்கத்தை தரும்: இன்றைய காலத்தில் தூக்கம் வராமல்தான் பலரும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பூசணி விதையில் இயற்கையாகவே ட்ரைப்டோபான் என்ற அமினோ ஆசிட் உள்ளது. மெலடோனின் மற்றும் செரடோனின் சேர்க்கைக்கும் இது மிகவும் அவசியமாகும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: இதிலுள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு செல்கள் முறையாக செயல்படுவதற்கு உதவும்.
* இதய நலன்: பூசணி விதையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனையும் இதயத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
* அதிக சத்துகள்: மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, காப்பர் என பூசணி விதையில் பல ஊட்டச்சத்துகள் உள்ளது. மேலும், ஆரோக்கியத்தை தரும் கொழுப்பும் புரதமும் உள்ளது.
* மனநலனை மேம்படுத்தும்: இதில் உள்ள மெக்னீசியம் நம் மனநிலையை மகிழ்ச்சியாக்க உதவுவதோடு மன அழுத்தத்தையும் குறைக்கும்.
* எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது: இதிலுள்ள துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்புகளை வலுப்படுத்த உதவுவதோடு எலும்புப்புரை நோய் ஏற்படாமலும் தடுக்கிறது.
* செரிமானத்தை மேம்படுத்துகிறது: நார்ச்சத்து அதிகமுள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.
* ஆன்டி ஆக்ஸிடெண்ட்: வைட்டமின்-இ, கரோட்டீனாய்டு போன்ற ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் பூசணி விதையில் உள்ளது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைப்பதோடு ஃப்ரீ ரேடிக்கல்ஸுக்கு எதிராக உடலை போராட வைக்கிறது.
* ப்ரோஸ்டேட் ஆரோக்கியம்: ப்ரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதாகவும் ப்ரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தை (BPH) குறைக்கவும் உதவுகிறது.
* சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது: இதிலுள்ள மெக்னீசியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
தொகுப்பு: கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
