நாகர்கோவில், ஏப்.23 : நாகர்கோவில் அடுத்த மேலமணக்குடி பகுதியை சேர்ந்தவர் பென்சிகர். இவரது மகள் டினோஷா (23). நாகர்கோவில் கோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற டினோஷா, திரும்பி வர வில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது தாயார் மேரி ஜாக்குலின், ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தார். அப்போது அவர் வேலைக்கு வந்து விட்டு சென்று விட்டதாக கூறினர். இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் தோழிகளிடம் விசாரித்துள்ளார். அப்போது யாரோ ஒருவர் போனில் பேசி அழைத்து சென்றதாக கூறினர். இது குறித்து மேரி ஜாக்குலின், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
