சென்னை: ஜனநாயகன் திரைப்படம் கசிந்த விவகாரத்தில் உடனடியாக முன்ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இன்னும் வெளிவராத ‘ஜனநாயகன்’ திரைப்படம் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உமா சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முனஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மிகப்பெரிய திரையரங்கு, செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் வணிக மதிப்பு உள்ளது.
மனுதாரர், இந்த திருட்டுச் சங்கிலியில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராவார். அவர் முழுப் படத்தையும் ஒரு ஹார்ட் டிரைவில் நகலெடுத்து, எக்ஸ், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட பல சமூக ஊடக மற்றும் செய்தி பரிமாற்ற தளங்கள் மூலம் பரப்பியுள்ளார். வெளியிடப்படாத திரைப்படத்தை பொது வெளியில் கசிய விட்டது ஒரு தீவிரமான பதிப்புரிமை திருட்டுச் செயலாகும். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை நீதிபதி, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்த நிலையில் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்து, அடுத்த விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
