சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ஐக்கிய அரபு நாடுகள் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற தமிழர்கள் தேர்தலில் வாக்களிக்க ஆர்வத்துடன் தமிழ்நாட்டிற்கு விமானத்தில் வந்து கொண்டிருக்கின்றனர். பக்ரைன் நாட்டில் வசிக்கும், தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
ஏப்ரல் 23ம் தேதி வாக்களித்துவிட்டு, சொந்த ஊரில் ஒரு 10 நாட்கள் தங்கி இருந்து மே மாதம் 4ம் தேதி தேர்தல் முடிவை பார்த்துவிட்டு, மீண்டும் வேலைக்கு திரும்பி வரவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்.
ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக விமான கட்டணம் உயர்ந்துள்ளது. எனவே குறைந்த கட்டணங்களில் இயக்கப்படும் விமானங்கள் மூலமாக, தமிழ்நாட்டிற்கு சென்னை, திருச்சி, கோவை அல்லது கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு வந்து, அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு சென்று, 23ம் தேதி, வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இருக்கிறோம் என்று உற்சாகமாக தெரிவித்தனர்.
இதேபோல் லண்டன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட மேலை நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்களும், தேர்தலில் வாக்களிப்பதற்கு தமிழ்நாட்டிற்கு விமானங்களில் வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில தினங்களாக, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
