செங்கோட்டை, ஏப்.21: கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று செங்கோட்டை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் வீடு,வீடாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மீண்டும் எடப்பாடி முதல்வரானவுடன் செயல்படுத்தப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகளுக்கு முப்போகம் பயிர்கள் விளைவிக்க நீராதாரத்தை இன்னும் பல மடங்கு பெருக்குவேன். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பேன். குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க நடவடிக்கை எடுப்பேன். முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுப்பேன். மாதம் இருமுறை மக்கள் குறைதீர் கூட்டங்களை நடத்துவேன். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட நடவடிக்கை எடுப்பேன்.
சாலை வசதிகளை மேம்படுத்துவேன். போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பேன். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவேன். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள் அனைத்தும் மராமத்து செய்யப்படும். தேங்காய், வாழை, மாங்காய், சின்ன வெங்காயம் போன்ற பயிர்களை விவசாயிகளை நேரடியாக விற்பனை செய்ய சந்தை அமைக்கப்படும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பேன். 24 மணி நேரமும் மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் மக்கள் பிரச்னைகளுக்காக சந்திக்கலாம். எனவே வாக்காளர்களாகிய நீங்கள் இந்த முறையும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.
