பெரம்பலூர், ஏப். 18: பெரம்பலூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கட்டணமில்லா கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக கட்டணமில்லா கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 15 நாட்கள் நடக்கிறது.
ஏப்ரல் 17ம் தேதி தொடங்கி மே மாதம் 1ம் தேதி வரையென 15 நாட்கள் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4 மணிமுதல் 6 மணி வரையிலும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தத்தித் தாண்டுதல் ஓட்டம், தடை தாண்டுதல் ஓட்டம், தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள், டேக்வாண்டோ,
கைப்பந்து(Hand ball), கால்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் 15 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியின் முதல் நாளான நேற்று (17ம் தேதி) இந்தப் பயிற்சியினை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பொற்கொடி தொடங்கி வைத்தார். இதில் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை கற்றுத் தருகின்றனர்.
