×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொகுதி வாரியாக அழியா மை, ஆவணங்கள் அனுப்பும் பணி தீவிரம்

அரக்கோணம், ஏப்.13: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதற்கான, அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிபட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம்(தனி) சட்டமன்ற தொகுதியில் விசிக, அதிமுக உள்ளிட்ட 13 வேட்பாளர்களும், சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட 23 வேட்பாளர்களும், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 15 வேட்பாளர்களும், ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் என மொத்தம் 65 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடி மையங்கள், சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் 341 வாக்குச்சாவடி மையங்கள், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடி மையங்கள், ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் 318 வாக்கு சாவடி மையங்கள் உள்ளது.இங்கு தேர்தல் நாளில் பயன்படுத்துவதற்கான தேவையான பொருட்களும் மற்றும் ஆவணங்களை, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்து வருகிறது. தற்போது மைசூரில் இருந்து அழியாத மை பெறப்பட்டிருக்கிறது. ஓட்டு போடும் முன் விரலில் இந்த மை வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு தேவையான மை பாட்டில்கள், பேனா, பென்சில், ரப்பர், சீல், அரக்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் ஆவணங்களும் படிப்படியாக தொகுதி வாரியாக தற்போது பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. மை பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மற்றும் ஆவணங்களும் வாக்குசாவடி வாரியாக தேர்தலுக்கு முந்தைய நாள் பிரித்து அனுப்பி வைக்கப்படும். அதுவரை அனைத்து பொருட்கள், ஆவணங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Ranipettai district ,Arakkonam ,Tamil Nadu Assembly General Election ,Election Commission ,Ranipet ,
× RELATED கணினி குலுக்கல் முறையில்...