×

சசிகலா காலில் விழுந்து ஆட்சியை பிடித்த அடிமை கூட்டம் எடப்பாடியை தலையெடுக்க வைக்காதீர்கள்: திருவள்ளூரில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது; தொடர்ந்து பிரசாரம் காரணமாக தொண்டை கட்டி இருப்பதால் பிரசாரம் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் வெற்றி வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனுக்காக வந்திருக்கிறேன். சென்ற முறை நடந்த தேர்தலில் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த நீங்கள், இந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கவேண்டும். கலைஞரின் நன்மதிப்பை பெற்றவரும் முதலமைச்சரின் அன்பை பெற்றவரும் எனது பாசத்திற்குரிய வி.ஜி.ராஜேந்திரன் தொகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதை முதலமைச்சரிடம் சண்டை போட்டு பெற்றுத் தருவதில் சிறந்தவர்.

மப்பேட்டில் 1200 கோடி மதிப்பீட்டில் துறைமுகம், ரூ.308 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூர் நகராட்சியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. திருப்பாச்சூரில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் 4 குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது ரூ.37 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.30கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை கொண்டு வரப்பட்டுள்ளது. சுங்குவார்சத்திரம் முதல் மப்பேடு வரை 4 வழிசாலை போடப்பட்டுள்ளது. மணவாள நகர், திருவாலங்காடு, திருவள்ளூர் டோல்கேட் பகுதிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 4 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் தொகுதி முழுவதும் 6 புதிய மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என அதிமுகவும் பாஜகவும் முயற்சி செய்கின்றனர். மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். முதியோர் உதவித்தொகை ரூ.1200 ல் இருந்து ரூ.2 ஆயிரம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். 10 லட்சம் கனவு இல்லம் வீடு கட்டி தரப்படும். உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் எனது தொகுதியில் வாக்கு சேகரிக்காமல் திருவள்ளூர் தொகுதி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். குட்கா வியாபாரிகளிடம் வசூல் செய்து அதனை விற்பனை செய்தவர்தான் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா. அவர்தான் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த சட்டமன்ற தேர்தல் டெல்லி அணியா? தமிழ்நாடு அணியா என மோதிப்பார்ப்போம். ஜெயிக்கப் போவது நமது தமிழ்நாடு அணிதான். திமுக அரசின் திட்டங்களை அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் எடுத்து சொல்லி திமுகவுக்கு வாக்களிக்க செய்யவேண்டும். அப்போது சசிகலா காலில் விழுந்து எடப்பாடி ஆசிபெறும் போட்டோவை காண்பித்து இந்த அடிமை கூட்டத்தை தலையெடுக்க வைக்காதீர்கள். அடுத்த 15 நாட்கள் உதயசூரியன் சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.

Tags : Sasikala ,Udayaniti Stalin ,Thiruvallur ,Thiruvallur Assembly Constituency ,V. G. Deputy ,Chief Minister Assistant Secretary ,Stalin ,Rajendran ,
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் குறித்து விஜய்...