×

நாமக்கல் தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

நாமக்கல், ஏப்.6: ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை, கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரிக்கின்றனர். அவர் சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். அதன்படி நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நாமக்கல்லில் உள்ள தமிழ் பாப்தீஸ்து திருச்சபையில் போதகர் மனோவா,கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் பங்குதந்தை தாமஸ் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் உயிர்பிப்பு பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். சிறப்பு வழிபாடு முடிந்ததும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

 

Tags : Easter ,Namakkal ,Christians ,Jesus Christ ,Good Friday ,
× RELATED ஆற்றுக்கு குளிக்க சென்ற பெண்ணை கேலி, கிண்டல் செய்த 4 பேர் மீது வழக்கு