×

இரண்டு வீல் இருந்தாதான் இலக்கை அடைய முடியும்: எடப்பாடி புது கண்டுபிடிப்பு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் உப்பளம் தொகுதியில் போட்டியிடும் மாநில செயலாளர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் காந்தி ஆகியோரை ஆதரித்து, வேனில் நின்றபடி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று அண்ணா திடலில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளார். தேஜ கூட்டணியில் முதல்வர் வேட்பாளரான அவர், கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்துள்ளார். மகளிர் சுயஉதவி குழுவுக்கு நிறைய கடனுதவி வழங்கியுள்ளார். தேஜ கூட்டணி இங்கு ஆட்சியில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இரண்டும் இணைந்திருந்தால்தான் புதுச்சேரி மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும்.

மாநிலத்தில் ஒரு கட்சியும், மத்தியில் ஒரு கட்சியும் ஆட்சி செய்தால், மாநிலத்திற்கு தேவையான திட்டங்களும் கிடைக்காது. நிதியும் கிடைக்காது. ஆகவே, ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் இருப்பதுபோல் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். அந்த அடிப்படையில் தேஜ கூட்டணி அமைந்திருக்கிறது. புதுச்சேரி சுற்றுலா மேம்பட மத்திய அரசிடமிருந்து எங்களது எம்பிக்கள் நிதி பெற்று தருவார்கள். சுற்றுலா எந்த அளவுக்கு மேம்படுகிறதோ, அந்த அளவுக்கு இந்த மாநிலத்தின் நிதி ஆதாரம் பெருகும்.

புதுச்சேரி யூனியன் பிரசேதத்திற்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்கு அதிமுக கடுமையான முயற்சி எடுக்கும் இவ்வாறு அவர் பேசினார். புதுச்சேரியில் இதுவரை பாஜ, என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் நடந்தது. ஆனால் எந்த வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று முதல்வர் ரங்கசாமியே குற்றம் சாட்டி பலமுறை பேசியுள்ளார். இதுதெரியாமல் மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சி நடந்தால்தான் புதுச்சேரிக்கு திட்டங்கள் வரும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதை கேட்டு அதிமுகவினரே சிரித்தபடி சென்றனர்.

Tags : Edappadi ,AIADMK ,General ,Tamil Nadu ,Opposition Leader ,Edappadi Palaniswami ,Anna Thidal ,State ,Anbazhagan ,Uppalam ,Gandhi ,Urulayanpettai ,Puducherry Assembly ,
× RELATED ஒரே தொகுதியில் மோதும் பங்காளிகள்