சென்னை: மாநகர பேருந்துகளில் ஐ.பி.எல் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவு சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் மூன்று மணி நேரத்திற்கும் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவர். பல பேருந்துகளை பயன்படுத்தி மைதானத்திற்கு பயணம் செய்து வரலாம்.
மேலும், பார்வையாளர்கள் வசதிக்காக போட்டி முடிந்த பின்பு தமது இருப்பிடம் செல்ல, மாநகர போக்குவரத்துக் கழகம் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிறுத்தம், சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம், அண்ணா சாலை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்கள் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ளது. மேலும், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரை சிற்றுந்துகள் (Shuttle service) இயக்கப்பட உள்ளது. எனவே, பார்வையாளர்கள் இப்பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
* மெட்ரோவிலும் இலவசம்
ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணச்சீட்டுகளில் உள்ள க்யூஆர் குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
