×

பங்குனி விழாவின் 7ம் நாளான இன்று மருந்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

துரைப்பாக்கம்: சென்னை நகரின் வரலாற்று சிறப்புமிக்க மிகப் பழமையான கோயில்களில் திருவான்மியூரில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோயிலில் நடப்பாண்டுக்கான 11 நாள் பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 7ம் நாளான இன்று காலை முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, இன்று காலை அருள்மிகு சந்திரசேகரர் திருத்தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நமசிவாய நம என்ற கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

கோயில் வளாகத்தில் இருந்து இன்று காலை துவங்கிய தேரோட்டம் கிழக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி, கிழக்கு கடற்கரை சாலை, வடக்கு மாடவீதி வழியாக வீதியுலாவாக வந்து, இன்று மதியம் கோயில் நிலைக்கு சென்றடைந்தது. இதில் பங்கேற்று ஏராளமான பக்தர்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் என பலர் நீர்மோர், அன்னதான பிரசாதங்களை வழங்கினர். இக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கர்நாடக இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Tags : Panguni festival ,Marundeeswarar temple ,Duraipakkam ,Tripurasundari ,Ambal Udanurai Arulmigu Marundeeswarar ,Thiruvanmiyur ,Chennai ,-day ,
× RELATED வேளாண்மை துறை சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க துண்டு பிரசுரம் விநியோகம்