பாலக்காடு: கேரளாவில் திருச்சூர் அவணூர் அடுத்த பாண்டியாட்டைச் சேர்ந்த அரவிந்தாக்ஷனின் மகள் அனுப்பிரியா (25). லாலூரிலுள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த இவர், நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர் நடத்திய விசாரித்தபோது, மாணவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் முளங்குன்னத்துக்காவு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் அனுப்பிரியாவை தேடி வந்தநிலையில், அவரது சடலம் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் சடலம் வீசப்பட்டதா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியின் காதலனை தேடி வருகின்றனர்.
