- மோடி அரசு
- ஈரான்
- காங்க்
- புது தில்லி
- மூத்த காங்கிரஸ்
- ஜெய்ராம் ரமேஷ்
- பிரதம
- மோடி
- ஐக்கிய
- மாநிலங்களில்
- இஸ்ரேல்
புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு மவுனம் சாதிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 21 நாட்களாக ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரமாக நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களால் ஈரான் நாட்டின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் டிரோன் உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட ராணுவக் கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் இந்த அசாதாரண சூழல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், ஒன்றிய அரசின் வெளியுறவு கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் மிகக்கடுமையான வான்வழித் தாக்குதல்களால் இந்தியா உட்பட உலகெங்கும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களை மோடி அரசு இதுவரை கண்டிக்கவில்லை. அதேபோல், ஈரான் நாட்டின் முக்கியத் தலைவர்கள் குறிவைத்து படுகொலை செய்யப்படுவதையும் இந்த அரசு கண்டிக்கவில்லை. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், அங்கு உள்நாட்டுப் போரைத் தூண்டவும் அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் ஒன்றிய அரசு வாய் திறக்கவில்லை.
வளைகுடா நாடுகளில் நிலவும் இந்தப் பதற்றத்தைத் தணிக்கவோ அல்லது போரை நிறுத்தவோ பிரதமர் மோடி எந்தவிதமான நீண்டகால திட்டத்தையோ அல்லது தூதரக ரீதியிலான முயற்சியையோ எடுக்கவில்லை. அமெரிக்க அதிபர் மற்றும் இஸ்ரேல் பிரதமருடனான தனது நட்பைப் பயன்படுத்தி, ஏன் இன்னும் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிக்கவில்லை? இந்த மவுனம் என்பது இந்தியாவின் நாகரிக விழுமியங்களுக்குச் இழைக்கப்பட்ட துரோகமாகும். அரசியல் கோழைத்தனமாகும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் மவுனம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
