- ரஜினி
- கம்யூனிஸ்ட்
- ஆதவ் அர்ஜுனா
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- வீரபாண்டியன்
- தமிழ்நாடு வெற்றி கிளப்
சென்னை: ரஜினி குறித்து ஆதவ் அர்ஜூனாவின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் கடந்த 12ம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார். அப்பொழுது, “எம்ஜிஆருக்கு பின், சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என வந்த நடிகர் ரஜினியை, அரசியலுக்கு வரவிடாமல் திமுக மிரட்டியது. இதனால், ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் படம் நடிக்க போய்விட்டார். அரசியலுக்கு வரும் மன தைரியம் விஜய்க்கு மட்டும் தான் உள்ளது” என பேசியுள்ளார்.
தான் அரசியலுக்கு வருவதை கைவிடுவதற்கு தனது உடல் நலனே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்ததை மறந்து விட்டு, ரஜினியை தைரியமற்றவர் என ஆதவ் அர்ஜூனா பேசியிருக்கிறார். அதுமட்டுமன்றி, ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் ரஜினி நடிப்பதையும் தரக்குறைவாக பேசியிருக்கிறார். தமிழக மக்களின் பேரன்பை பெற்ற மூத்த திரை கலைஞர் ரஜினியை, ஆதவ் அர்ஜூனா ஏளனமாக பேசியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
