மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சாலையில் கொட்டிய ஆயில் குறித்து தெரியாமல் சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் வாகனத்துடன் வழுக்கி விழுந்ததில் காயமடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து வன பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் சமயபுரம் உள்ளது. கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையில் நேற்று மாலை இப்பகுதி வழியாக சென்ற கனரக வாகனம் ஒன்று ஆயிலை கொட்டிவிட்டு சென்றது. இதனை அறியாமல் அவ்வழியே வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி நிலைதடுமாறி வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தனர்.
இத்தகவலறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் அனில் குமார் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து சாலையில் கொட்டிய ஆயில் மீது நுரை கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து அதன் மீது மண் கொட்டி சாலையை சீரமைத்தனர்.முன்னதாக சாலையில் கொட்டிய ஆயில் மீது இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
