பியாங்யாங்: வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி பெற்றுள்ளார். வெறும் 0.07% மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 1957க்கு பிறகு முதல்முறையாக எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 15 அன்று நடைபெற்ற 15-வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தலில், கிம் தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97% வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாடுகளில் இருப்பவர்கள் அல்லது கடலில் பணிபுரிபவர்கள் (0.0037%) மற்றும் வாக்களிக்க வராதவர்கள் (0.00003%) தவிர மற்ற அனைவரும் வாக்களித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இருப்பினும், வடகொரியத் தேர்தல் வரலாற்றில் அரிதான நிகழ்வாக, 0.07% பேர் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டுத் தேர்தல் முறையில் ஒரு மாற்றமாகக் கருதப்படுகிறது.
வடகொரியா தேர்தல் சட்டங்களின்படி, தொழிலாளர்கள், விவசாயிகள், சேவைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 687 பிரதிநிதிகள் இந்தப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, உச்ச மக்கள் பேரவைத் தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்-கும் முக்கியமானவர் ஆவார். இவர் கல்லிம்கில் தொகுதி எண். 5-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வடகொரியாவில் இத்தகைய பிரம்மாண்டமான வெற்றிகள் வழக்கமான ஒன்று என்றாலும், இந்த முறை பதிவான 0.07% எதிர்ப்பு வாக்குகள் இணையதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக வலைதளப் பயனர்கள் இதனை கிண்டலாக விமர்சித்து வருகின்றனர். ஒரு பயனர், “அந்த 0.07% பேருக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், கிம் ஜாங் உன்னின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “அந்த 0.07% பேரின் பெயர்களை மட்டும் எனக்குக் கொடுங்கள்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
