நாமக்கல்: ராசிபுரம் அருகே 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நேற்று 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள அணைபாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயதான இரண்டு சிறுமிகளை, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், கடந்த 2020ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தது. இதுகுறித்து அந்த சிறுமிகளின் பெற்றோர்கள், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டன் (30), சூர்யா (23) மற்றும் பிரபு (27) உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி முத்துசாமி, குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன், சூர்யா, பிரபு ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர்கள் 3 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு, ஏற்கனவே தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் மீதான வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
