×

தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர FASTag பாஸின் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக உயர்த்தியது ஒன்றிய அரசு

டெல்லி: தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர FASTag பாஸின் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியது. தமிழ் நாட்டில் உள்ள 66 சுங்கச்ச்சாவடிகளின் கட்டணத்தையும் 5-7% உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் FASTag வருடாந்திர பாஸ் (Annual Pass) விலை 2.5 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதுவரை ரூ.3,000-க்கு வழங்கப்பட்டு வந்த இந்த பாஸ், இனி ரூ.75 கூடுதலாகச் சேர்த்து ரூ.3,075-க்கு விற்பனை செய்யப்படும். தமிழ் நாட்டில் உள்ள 66 சுங்கச்ச்சாவடிகளின் கட்டணத்தையும் 5-7% உயர்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்த பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, டோல் கட்டணங்களின் வருடாந்திர திருத்தத்திற்கு ஏற்ப பாஸ் விலையும் மாறும் என்று அறிவித்திருந்தது. இந்த விலை மாற்றத்தால் நாடு முழுவதும் சுமார் 52 லட்சம் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருடாந்திர பாஸ் முறையானது குறிப்பாக வேலை அல்லது தொழில் நிமித்தமாகத் தினமும் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துபவர்களுக்குப் பெரும் லாபத்தை அளிக்கிறது. இந்த பாஸின் செல்லுபடியாகும் காலம் , வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு அல்லது 200 பயணங்கள் (Trips) ஆகும். இதில் எது முதலில் நிறைவடைகிறதோ அதுவரை மட்டுமே இந்த பாஸைப் பயன்படுத்த முடியும்.

முக்கியமாக, இந்த வசதி இந்தியாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது இந்த வருடாந்திர பாஸ் செல்லாது என்பதால், அங்குள்ள டோல் பிளாசாக்களில் உங்களது வழக்கமான FASTag கணக்கில் உள்ள இருப்புத் தொகையிலிருந்தே கட்டணம் கழிக்கப்படும்.

இந்த பாஸைப் பெறுவதற்கு வாகன ஓட்டிகள் ‘ராஜ்மார்க் யாத்ரா’ (Rajmarg Yatra) மொபைல் செயலி அல்லது NHAI மற்றும் MoRTH ஆகிய அரசு அமைப்புகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை நாடலாம். ஆன்லைனில் இதற்கான கட்டணத்தைச் செலுத்திய இரண்டு மணி நேரத்திற்குள் பாஸ் ஆக்டிவேட் செய்யப்பட்டு, பயனரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த பாஸிற்காகச் செலுத்தப்படும் தொகை ஒருமுறை மட்டுமே (One-time payment) செலுத்தப்பட வேண்டும் மற்றும் இது எந்தச் சூழ்நிலையிலும் திரும்பப் பெற முடியாதது (Non-refundable). ஒருவேளை ஒரு வருடத்திற்குள் நீங்கள் 200 பயணங்களை முடிக்கவில்லை என்றாலும், மீதமுள்ள பயணங்களுக்கான தொகை திருப்பித் தரப்பட மாட்டாது.

Tags : EU government ,FastAG ,Delhi ,Tamil ,
× RELATED வெளியுறவுக் கொள்கையிலும் Failuremodel எனப்...