×

சென்னையில் இருந்து இன்று இரவு துபாய்க்கு சிறப்பு விமானம்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து துபாய் சென்றுவரும் ஏர்இந்தியா விமானங்களும் கடந்த மாதம் 28ம்தேதி முதல் கடந்த 14 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாயில் இருந்து அவ்வப்போது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை-துபாய் இடையே சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. எனினும் சென்னையில் இருந்து அபுதாபி, குவைத், தோகா, மஸ்கட், ஓமன், சவுதி அரேபியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு இன்னும் வழக்கமான விமான சேவைகள் துவங்கப்படவில்லை. இதனால் மத்திய கிழக்கு நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல், அந்தந்த நாடுகளில் பெரிதும் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து இன்றிரவு 8.30 மணியளவில் துபாய்க்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு சிறப்பு விமானத்தை இயக்குகிறது. இந்த விமானம் நள்ளிரவு 12.35 மணியளவில் துபாயை சென்றடைகிறது. பின்னர், அங்கிருந்து நாளை (15ம் தேதி) அதிகாலை 2.10 மணியளவில் புறப்பட்டு, காலை 6.15 மணியளவில் சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்துக்கு வந்து சேருகிறது. இந்த சிறப்பு விமானததில் சுமார் 200 பேர் பயணம் செய்கின்றனர்.

‘’ஏற்கனவே முன்பதிவு செய்து, அந்த விமான சேவை ரத்தானதால் பயணிக்க முடியாமல் தவிக்கும் பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்’’ என்று ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai ,Dubai ,AIR INDIA ,Emirates Airlines ,
× RELATED தமிழ்நாடு இயங்குபடம்,...