சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை இடையான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கார்க் வேளச்சேரி-பரங்கிமலை புதிதாக கட்டப்பட்டுள்ள பாதையில் நேரடியாக ஆய்வு செய்தார். 9 பெட்டிகள் மின்சார ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. தண்டவாளம், சிக்னல், மின்சார கம்பிகள் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.
சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் அதனை பரங்கிமலை வரை விரிவாக்க வேண்டும் என்று 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. பரங்கிமலை புறநகர் ரயில் நிலையத்தோடு இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் காலதாமதம் ஆனது.
நீதிமன்ற வழக்குகளால் பணிகள் முடங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரைவுபடுத்தப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்திட்டம் தொடங்கி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஒரு சில நாட்களில் இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று அதிவேக சோதனை ஓட்டம் தொடங்கியது.
வேளச்சேரி-பரங்கிமலை இடையான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில் மூலம் இன்று மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை இந்த சோதனை ஓட்டம் முதன்மை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டத்தின்போது அனுமதி இல்லாத நபர்கள் யாரும் ரயில் தண்டவாளங்களை நெருங்கவோ அதன் அருகில் வேலை செய்யவோ வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
