×

3 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 9 கோடியே 31 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக சென்னை, மதுரை. கோயம்புத்தூர் உட்பட 23 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடங்கள், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் – தையூரில் உள்ள தங்குமிடங்களில் 66 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதியோர் இல்லங்கள். 6 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செய்யாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 27 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 3 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு அரசால் கட்டுமானத் தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்க தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலமாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி. திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம். தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீட்டு வசதி நலத் திட்ட உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வரசு பொறுப்பேற்ற இந்த ஐந்து ஆண்டுகளில், 37.75 இலட்சம் பதிவு பெற்ற அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3,317.16 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

உழைப்பாளர் நலக்கூடங்கள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் 2025-26ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக, கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்களது அன்றாட பணிகள் தொடர்பாக அதிகளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 உழைப்பாளர் நலக்கூடங்கள் 20.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை பெரியார் நகர் மற்றும் சைதாப்பேட்டை, மதுரை. கோயம்புத்தூர், திருச்சி பொன்நகர் மற்றும் மன்னார்புரம், திருநெல்வேலி. ஈரோடு. திருப்பூர். செங்கல்பட்டு மதுராந்தகம் மற்றும் கூடுவாஞ்சேரி. நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் தென்காசி. திருவண்ணாமலை, சேலம், திருவாரூர், தருமபுரி, கரூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 23 இடங்களில் 9 கோடியே 31 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

முதியோர் இல்லங்கள்

இருந்து கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களாக 60 வயது பூர்த்தியடைந்து, குடும்பத்தினரின் கவனிப்பும், பராமரிப்பும் இல்லாத கட்டுமானத் தொழிலாளர்கள் தலா 50 நபர்கள் தங்கும் வகையில் உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் உள்ள தங்குமிடங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 முதியோர் இல்லங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

கட்டி முடிக்கப்பட்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடத்தை திறந்து வைத்து, புதிதாக கட்டப்படவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

செய்யாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 6 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாலையில் 9 கோடியே 57 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணப்பாறையில் 9 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 27 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., தொழிலாளர் துறை ஆணையர் சி.அ. ராமன். இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Department of Labour Welfare and Skill Development ,Chennai, Madurai ,Coimbatore… ,
× RELATED திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்