×

உச்சி மற்றும் வேர் அழுகல் நோயிலிருந்து தப்பிக்க வயல்களை சுத்தமாக பராமரித்தால் நோய்த் தாக்குதலை தவிர்க்கலாம்

*தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை

தேனி : உச்சி மற்றும் வேர் அழுகல் நோயிலிருந்து தப்பிக்க தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி பயிரிடுவதை தவிர்க்கலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்:

பப்பாளியில் பைட்டோப்தோரா கிரிடம்/ உச்சி மற்றும் வேர் அழுகல் என்பது பைட்டோப்தோரா இனத்தில் உள்ள பல்வேறு வகையான மண்ணில் பரவும் நோய்க்கிருமிகள் கிரிடம் மற்றும் வேர் அழுகல் நோயை ஏற்படுத்துகிறது.

பைட்டோப்தோரா பால்மியேரா மற்றும் நிக்கோட்டியானே இவற்றின் முதன்மை நோய்க் கிருமிகளாகும். இவ்வகை பைட்டோப்தோரா பப்பாளி சாகுபடி செய்யப்படும் அநேக இடங்களில் காணப்படுகிறது.

*நோய்த் தாக்கும் சூழ்நிலை: அதிகப்படியான மண் வெப்பநிலை அல்லது ஈரப்பதம் இந்நோய் தாக்குதலுக்கு உகந்தது. பாதிக்கப்பட்ட விதை / செடிகளை நடவு செய்வது. தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி பயிரிடுவது.

* பாதிக்கப்படும் மற்ற பயிர்கள்: மிளகாய், பூசணி, திராட்சை, முலாம்பழம், பாகற்காய் மற்றும் இதர பயிர்கள் பாதிக்கப்படும்.

* அறிகுறிகள்: செடிகள், இலையின் காம்புகள் மற்றும் இலைகளின் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் அடர் பச்சை நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். குறைந்த பூ மற்றும் காப்புத் திறன். தரைமட்ட அளவில் தண்டுகளில் வெண்ணிற பூஞ்சாணங்கள் காணப்படும். காய் மற்றும் கனிகளில் வெள்ளை நிறத்தில் திட்டு திட்டுக்களாக நோய் பூஞ்சாணத்தை காணலாம்.

நாளடைவில் இவை அழுகிய நிலையில் விழும். இவ்வகை அறிகுறி முதலில் முதிர்ந்த காய்களிலிருந்து பின்பு பிஞ்சுகளுக்கு பரவும்.தரை மட்ட அளவில் தண்டுகளில் புண்கள்/ சொறி போன்று காணப்படும். நாளடைவில் இவை பெரிதாகி அழுகி முறிந்து விழும். பகுதியாக பாதிக்கப்பட்ட செடிகளின் தண்டுகளில் ஒருபுறம் அழுகியும் மறுபுறம் நன்றாகவும் தென்படும்.

* கட்டுப்படுத்தும் முறைகள் : கோகோ சாகுபடி மேற்கொள்ளப்படும் நிலங்களுக்கு அருகில் பப்பாளி பயிரிடுவதை தவிர்க்கவும். சரியான நீர்பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதியுள்ள நிலத்தை தேர்வு செய்து பயிரிடவும். தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி பயிரிடுவதை தவிர்க்கவும்.

பப்பாளி விதைகள் / நாற்றுகளை சூடோமோனஸ் கொண்டு நேர்த்தி செய்து பின்பு நடவு மேற்கொள்ளவும். டிரைக்கோடெர்மா மற்றும் பேசில்லஸ்ஸை கலந்து தொழு உரங்களை ஊட்டமேற்றி அடியுரமாக இடுவதால் தாக்குதல் மட்டுப்படுத்தப்படுகிறது.

நடவு செய்த ஒரு மாத காலங்களிலிருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை டிரைக்கோடெர்மா ஹர்சியானம் கலந்து வேரில் ஊற்றுவதால் தாக்குதல் குறைக்கப்படும். உதிர்ந்த இலைகள், பழங்கள் சாய்ந்த மரங்களை சேகரித்து அழிக்கவும்.

நுனி குருத்துகள் வாடி பின்பு செடிகள் இறந்துவிடும். தழைச்சத்து உர பயன்பாட்டினை குறைத்து நுண்ணூட்டசத்துகளின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதால் பயிர்கள் எதிர்ப்பு சக்தி பெறும். வயல்களை சுத்தமாக பராமரித்தால் நோய்த் தாக்குதலை தவிர்க்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : Horticulture Department ,Theni ,
× RELATED தமிழ்நாடு-கேரள எல்லை பகுதியில்...