×

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி 5, 6வது நடைமேடைகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்

மாதவரம், பிப்.18: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் – ஆவடி – திருவள்ளூர் வழித்தடத்திலும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்களில் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணி நிமித்தமாக சென்னைக்கு வந்து செல்கின்றனர். சென்னை புறநகர் மின்சார ரயில்களில் மிக குறைந்த கட்டணம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் புறநகர் ரயில்களின் பாதை, நாளை மறுநாள் (20ம் தேதி) நள்ளிரவு முதல் தற்காலிகமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை, பூங்கா நகரில் உள்ள ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக நடைமேடை 10 மற்றும் 11ல் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் வரும் 20ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைமேடை 5 மற்றும் 6 இயக்கப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் விரைவு ரயிகள் இயக்கப்படும் நடைமேடை 6லும் , செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் நடைமேடை 5லும் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை உட்பட இடைப்பட்ட பிப்ரவரி 20ம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தெற்கு ரயில்வேயில் தற்காலிக அட்டவணைப்படி மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.

மின்சார ரயில்கள் விரைவுப் பாதையில் இருந்து இயக்கப்பட உள்ளன. ரயில் எண்கள் மற்றும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள மின்சார சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார ரயில் எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 164 மின்சார ரயில்கள் இயக்கப்படும். 84 ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும் 80 ரயில்கள் செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கமும் இயக்கப்பட உள்ளது. வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் நடைபெற்று, இறுதியில் தொடங்கும். விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Egmore Railway Station ,Electric Trains ,Madhavaram ,Chennai Beach ,Tambaram ,Chengalpattu ,Chennai Central ,Avadi ,Thiruvallur ,Chennai ,
× RELATED கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில்...