×

அதிமுக, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் 2 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புதுடெல்லி: அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை குறித்த வழக்கானது தலைமை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் ஆறு எம்பி பதவி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலும் தற்போது நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் புகழேந்தி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.அதில்,‘‘அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரம் தொடர்பாக முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தவறிய, தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ்,‘‘அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் அவமதிப்பு வழக்கின் பரிந்துரையை கொடுத்து இரண்டு வரும் ஆகி விட்டது. ஆனால் தேர்தல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் விரைந்து முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தெரிவித்தார்.

இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதி அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பாக மனுக்கள் கொடுத்தும் கடந்த இரண்டு வருடங்களாக காலம் தாழ்த்தி வருவது ஏன். இத்தனை நாட்களாக என்ன தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்று தேர்தல் ஆணையத்திற்கு சரமாரி கேள்வியெழுப்பினார். பின்னர் நீதிபதி, ‘‘இந்த வழக்கை வரும் 23ம் தேதி ஒத்திவைக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கத்தை அறிக்கையாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால் இந்த விவகாரத்தில் வரும் 23ம் தேதி இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags : AIADMK ,Delhi High Court ,Election Commission ,New Delhi ,Chief Election Commission ,Rajya ,Sabha ,Parliament ,Tamil Nadu ,
× RELATED தேசப் பாதுகாப்பில் அரசியல் வேண்டாம்:...