×

தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க டேன்டீ நிறுவனம்: குழு அமைத்து ஆய்வு செய்ய அரசுக்கு கோரிக்கை

 

பந்தலூர்: தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்ட கழகம் டேன்டீ நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய பகுதிகளில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்காக மறுவாழ்வு திட்டத்தின் மூலம் கடந்த 1969ம் ஆண்டு டேன்டீ நிறுவனம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த காலங்களில் லாபத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக டேன்டீ நிர்வாகம் கூறி வருகிறது.

தற்போது பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், பாண்டியார் தேயிலை தோட்டங்களில் பல நூறு ஏக்கர் பயிரிடப்பட்டுள்ள தேயிலை நிலப்பகுதிகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவை இன்று வனமாக மாறியுள்ளது. அதனால், நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு பணி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பணி ஓய்வுபெற்றபின் அவர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடைகள் இதரப் படிகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த பணப்பலன்களை வழங்கினர்.

தொடர்ந்து தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வையும் வழங்கி டேன்டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தனர். பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பதாலும், டேன்டீ தேயிலைத்தூளுக்கு உரிய சந்தை விலை கிடைக்காமல் இருப்பதாலும் டேன்டீ நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், நிதி சுமை ஏற்பட்டு டேன்டீ தேயிலை தோட்டங்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக, டேன்டீ தேயிலைத்தோட்டங்களில் களைச்செடிகள் வளர்ந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக இருந்து வருகிறது.

அங்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நீடிப்பதாக தொழிலாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து எல்பிஎப் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கணபதி கூறியதாவது: தொழிலாளர்களுக்கு டேன்டீ நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவையில் இருந்த பணப்பலன்களை 2013ம் ஆண்டு வரை கணக்கிட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது. 5 ஆண்டுகளில் மீண்டும் தற்போது தமிழ்நாடு அரசு ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள தொழிலாளர்களின் பணப்பலன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டேன்டீ நிர்வாகம் தொடர்ந்து தமிழ்நாடு அரசிடம் நிதி உதவி பெற்று டேன்டீ தொழிலாளர்களுக்கு உதவி வருகிறது. இங்குள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூடிவிட்டு இங்கு பறிக்கும் பசுந்தேயிலைகளை குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதால் போக்குவரத்து செலவு கூடி வருகிறது. நிர்வாகத்திடம் கேட்டால் கோத்தகிரி, குன்னூர் பகுதியில் உள்ள டேன்டீ தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலைத்தூளுக்கு நல்ல விலை கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். மாதந்தோறும் 10ம் தேதிக்குள் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் சம்பளம் வழங்க பணம் இல்லை என கூறி அரசிடம் நிதி பெற்று தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் 15ம் தேதி வரை நீட்டித்து வழங்கி வருகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தொழிலாளர்கள் குடியிருப்புகள் மற்றும் தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்கு குடியிருப்புகள் அருகில் கட்டப்பட்ட கழிவறைகள் மேம்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. தொழிலாளர்களின் குடியிருப்புகளை பராமரிப்பதற்கு அரசிடம் நிதி வாங்கி தொழிலாளர்கள் குடியிருப்புகளை பராமரிப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.டேன்டீ தேயிலை தோட்டத்தின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் தேயிலைத்தோட்டங்களில் தேயிலைச்செடிகளுக்கு இடையே சவுக்கு உள்ளிட்ட மரங்களை நடவு செய்தும், குறுமிளகு கொடிகளை உருவாக்கியும் வருமானம் ஈட்டுகிறார்கள்.

அதுபோல் டேன்டீ நிறுவனத்திலும் தேயிலைச்செடிகளுக்கு இடையே சில்வர்வொக் மரங்கள் வளர்த்து, குறுமிளகு கொடிகளை பயிரிட்டு வருமானத்தை அதிகரித்து டேன்டீ நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு குழு அமைத்து உரிய ஆய்வு செய்து டேன்டீ நிறுவனத்தை லாபத்துடன் இயக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும். டேன்டீ டீத்தூளை 100 கிராம் முதல் பாக்கெட்டுகளில் அடைத்து அனைத்து ரேசன் கடைகளிலும் விற்பனை செய்யவேண்டும். அதன்மூலம் டீத்தூள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. டேன்டீ நிறுவனத்தை லாபத்துடன் இயக்குவதற்கு அரசு மற்றும் டேன்டீ நிறுவனம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tandy Company ,Pandalur ,Tamil Nadu Government Tea Estates Corporation ,Nilgiris district ,Kotagiri ,Coonoor ,Gudalur ,Coimbatore ,Valparai… ,
× RELATED புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு...