புதுடெல்லி: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில், இந்தியாவின் சம்ரத்ராணா-சுருச்சி சிங் இணை 479.6 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ்தானின் நிஜினா சைட்குலோவா-முகமது கமலோவ் ஜோடி 481.3 புள்ளிகள் குவித்து, தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. சீனதைபேயின் செங்யென் சிங்-ஹிக் சியாங் சென் ஜோடி 412.2 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றது.
