கலசபாக்கம், பிப்.5: கலசபாக்கம் தொகுதியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகளை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆய்வு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் திட்டங்கள் வீடு தேடி செல்கிறது. அதன்படி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி கலசபாக்கம் தொகுதியில் மாதந்தோறும் தாயுமானவர் திட்டத்தின் மூலம் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் போளூர் ஒன்றியம், படவேடு பகுதியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகளை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆய்வு செய்தார். அப்போது மொத்தம் உள்ள குடும்ப அட்டைகள் விவரம் இதன் மூலம் பயன் பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதை முறையாக செயல்படுத்த வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு எம்எல்ஏ அறிவுரை வழங்கினார். அப்போது வீடு தேடி ரேஷன் பொருட்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதால், யாருடைய உதவியும் இல்லாமல் நேரடியாக ரேஷன் பொருட்கள் பெற்று வருகிறோம். தொடர்ந்து 7 மாதகாலமாக இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறோம் என முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எம்எல்ஏவிடம் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.வி.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
