நாகர்கோவில், பிப்.4: குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகி, வழக்கறிஞர் ஐ.ஜிபி.ஜாண் கிறிஸ்டோபர் எழுதிய ’வெல்லும் திராவிட மாடல்’ நூல் வெளியீடு சென்னையில் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட திமுக முன்னாள் துணை செயலாளரும், மாவட்ட பிரதிநிதியுமான ஐ.ஜி.பி.ஜாண் கிறிஸ்டோபர் ’வெல்லும் திராவிட மாடல்’ என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் 5 ஆண்டுகால திமுக அரசின் சாதனைகள், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பலன்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் வாழ்வில் அதனால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் ஆகியவை தரவுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.
அவற்றோடு, திமுகவின் தூண்களான அண்ணா, கருணாநிதி, தற்போதைய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ஆகியோரின் அரசியல், சமூகப் பணிகளையும், அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பங்களிப்பையும் இந்நூல் விவரிக்கிறது. திமுக அரசின் சாதனைகள் குறித்து அனைத்து மக்களும் அறிந்து பயன்பெறும்வகையில் இந்நூலை கட்டணமின்றி, இலவசப் பிரதியாக மக்களுக்கு வழங்கி வருகிறார் ஐ.ஜி.பி.ஜாண் கிறிஸ்டோபர். இந்நூலின் முதல் பிரதியை சென்னை அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின் போது குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
