சென்னை: ‘ஜனநாயகன்’ படத்துக்கு அமேசான் ப்ரைம் மூலம் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய், பூஜா ஹெக்டே மமிதா பைஜு நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் பிரச்சனையால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாமல் படம் தள்ளிப்போய் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தாலும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தலையிட விரும்பவில்லை என கூறிவிட்டதால், சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. ஜனநாயகன் தயாரிப்பாளர் தரப்பு மற்றும் சென்சார் போர்டு தரப்புக்கும் தலா அரை மணி நேரம் வாதாட நேரம் கொடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். இதனால் படம் எப்போது வெளியாகும் எனத் தெரியாமல் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இப்போது படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி ‘ஜனநாயகன்’ படத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு உரிய நஷ்ட ஈடு தர வேண்டும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் கேட்டிருக்கிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமை அமேசான் ப்ரைம்க்கு பெரும் தொகைக்கு விற்கப்பட்டது. படம் வெளியாகி, சில நாட்களிலேயே ஓடிடியில் ஒளிபரப்பாகும் விதமாக இதன் உரிமம் பேசப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இப்போது தாமதம் ஆவதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அமேசான் ப்ரைம் நிறுவனம் ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனத்தை எச்சரித்துள்ளது. இதனால் ‘ஜனநாயகன்’ படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
