வேலூர், ஜன.21:வேலூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியை உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.வேலூர் சேண்பாக்கம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜெகதீஸ்வரன். இவரது மனைவி சிந்து(32). இவர் அதே பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 18ம் தேதி ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். காலை 11 மணியளவில் ரத்தினகிரி மேம்பாலத்தில் சென்றபோது சிந்துவின் சேலை முந்தானை இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள ராணிப்பேட்டை வளாக சிஎம்சியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் 19ம் தேதி இரவு 10.15 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அவரது கணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.இதையடுத்து அவரது இதயம் மற்றும் நுரையீரல் எடுக்கப்படவில்லை. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை வேலூர் சிஎம்சிக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் வழங்கிய சிந்துவுக்கு குழந்தைகள் இல்லை.
