திருவொற்றியூர், ஜன.21: திருவொற்றியூரில் கட்டுக்கட்டாக பணத்துடன் அமர்ந்திருந்த ஆதரவற்ற முதியவரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், 78 வயது முதியவர் அமர்ந்திருந்தார். அவரது கையில் 500 ரூபாய் நோட்டுகள் ஏராளமாக இருந்தன. இதனை கண்ட பொதுமக்கள் திருவொற்றியூர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தலைமை காவலர் நவீன்குமார் மற்றும் போலீசார் விசாரித்ததில், சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியரான ராமகிருஷ்ணன் (78) என்பதும், குடும்பத்தினர் யாருமின்றி ஆதரவற்ற நிலையில் தனியார் லாட்ஜில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ராமகிருஷ்ணனை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர், மருத்துவ சிகிச்சைகள் முடிந்து முதியோர் காப்பகத்தில் தங்கவைத்தனர்.
