×

திரைப்பட நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கை விசாரிக்க விருப்பமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி

 

புதுடெல்லி: நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் முதலில் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் 2026 பொங்கல் வெளியீடாக நேற்று முன்தினம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவும் சில இடங்களில் தொடங்கின. ஆனால் படத்துக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்று கிடைப்பதற்கு தாமதமானதால் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி, ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்சார்போர்டுக்கு உத்தரவிட்டார்.தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக உடனடியாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பரிசீலனை செய்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுவும், அதேபோன்று சென்சார்போர்டு மற்றும் அதன் பிராந்திய அலுவலர் ஆகியோர் தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பட நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஜனநாயகன் படத்தின் வெளியீடு ஒன்பதாம் தேதி என எங்களது தரப்பில் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் படத்தை திரையிட ஏற்பாடுகளை செய்து விட்டோம். ஆனால் கடைசி நேரத்தில் படத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கும் காட்சிகளை நீக்கினால்தான் தணிக்கை சான்றிதழ் வழங்க முடியும் என்று சென்சார் போர்டு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தை பொறுத்தவரை நீங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளது என்பது அதீத செயல்பாடு. இதுதொடர்பான வழக்கு வரும் 21ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்படி இருக்கும் போது இத்தனை அவசரம் ஏன் என்பது புரியவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி ஜனநாயகன் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்தது. ஆனால் அதனை எதிர்த்து நீங்கள் ஏன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. நீங்கள் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வின் முன்னிலையில் முறையிடுங்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,‘‘ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இருப்பது முற்றிலும் அரசியல் ரீதியானது. குறிப்பிட்ட தேதியில் திரைப்படம் வெளியிடப்படவில்லை என்றால் அது பெரும் பாதிப்புகளையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் உங்களது கோரிக்கை மற்றும் வாதங்களை ஏற்க முடியாது.

எனவே பட நிறுவனம் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இருப்பினும் வரும் இருபதாம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். அங்கே உங்களது கோரிக்கையை முறையீடாக வைக்கலாம்” என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : Democrat ,Supreme Court ,New Delhi ,Vijay ,Diwali ,
× RELATED திரைப்பட நிறுவன மேல்முறையீட்டு மனு...