×

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கரும்பு, மஞ்சள்குலை, பனங்கிழங்கு வாங்க திரண்ட மக்கள்

கோவில்பட்டி : தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை, நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சந்தைகள், பஜார்களில் கரும்பு, மஞ்சள் குலை மற்றும் பனங்கிழங்கு, காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் காலை வேளையில் மக்கள் தங்களது வீடுகள் முன்பு வண்ண கோலமிட்டு, பொங்கல் பானை வைத்து சர்க்கரை பொங்கலிட்டு சூரியபகவானை வழிபடுவது வழக்கம். பொங்கலிட்டவுடன் பொங்கல் பானையை தீபமேற்றிய குத்துவிளக்கு முன்பு வைத்து, அதன் இருபுறமும் கரும்புகளை தோரணமாக வைத்து தமிழக மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

கிராமங்களில் இந்த பொங்கல் பண்டிகையானது வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த நவதானிங்கள், காய்கறிகளை வைத்து பொங்கலிட்டு வழிபாடு நடத்துவர். இந்தாண்டு பொங்கல் திருநாள் நாளை (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம், விளாத்திகுளம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சந்தை மற்றும் பஜார்களில் கரும்பு கட்டுகள் விற்பனை துவங்கியுள்ளது. மதுரை, மேலூர் பகுதியில் இருந்து கரும்பு கட்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்து அங்கிருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

கோவில்பட்டி நகரில் மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு, எட்டயபுரம் ரோடு, புதுரோடு, கிருஷ்ணகோயில் தெரு, கடலையூர் ரோடு, பசுவந்தனை ரோடு, புதுக்கிராமம் போன்ற பல்வேறு இடங்களில் மரத்தடிகளால் அமைக்கப்பட்டுள்ள சாரங்களில் கரும்பு கட்டுகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

15 எண்ணம் கொண்ட ஒரு கரும்பு கட்டு ரூ.500 முதல் ரூ.600 வரை வியாபாரிகள் விற்கப்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கரும்பு கட்டுகளை வாங்கி வேன் மற்றும் ஆட்டோக்கள் மூலம் எடுத்து செல்கின்றனர்.

இதேபோல் 10 எண்ணம் கொண்ட ஒரு கட்டு பனங்கிழங்கு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. மஞ்சள்கிழங்கு குலைகள் தரம் வாரியாக ரூ.30, ரூ.40, ரூ.50க்கும் விற்பனையாகிறது. மேலும் காய்கறிகள், வாழைத்தார்கள், வாழை இலை கட்டுகள், பூமாலைகள், மங்களப் பொருட்கள், பொங்கல் வைப்பதற்கு தேவையான பருத்திமார் கட்டுகள், பொங்கல் வைக்கும் அடுப்புகளில் வெள்ளையடிப்பதற்கான சுண்ணாம்பு, கலர் கோலப்பொடிகளின் விற்பனையும் களை கட்டியது.

பொங்கல் பானை கடை மற்றும் ஜவுளி கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொங்கல் பொருட்களை வாங்குவதற்கு சந்தைகளிலும், பஜார் பகுதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூடும் பகுதிகளில் எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Pongal ,Kovilpatti ,Thoothukudi district ,Thai Pongal ,
× RELATED சாரல் மழையையும் பொருட்படுத்தாமல்...