க.பரமத்தி, ஜன. 14: க.பரமத்தி அருகே உள்ள புதுக்கநல்லி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.க.பரமத்தி ஒன்றியம் காருடையாம்பாளையம் ஊராட்சியில் புதுக்கநல்லி உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் தினமும் கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் புதுக்கநல்லி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் பொதுமக்கள் பல நேரம் வெட்ட வெளியில் பேருந்துக்கு காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே புதுக்கநல்லி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
