தெஹ்ரான்: இஸ்ரேலின் உளவு அமைப்புக்காக உளவு பார்த்த நபருக்கு ஈரான் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டுக்காக உளவு பார்த்ததாக ஒருவரை ஈரான் கைது செய்தது. அவரது பெயர் அலி அர்தெஸ்தானி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் மொசட் அதிகாரிகளுக்கு முக்கியமாக தகவல்களை அனுப்பி அதற்கு ஈடாக கிரிப்டோகரன்சி வடிவில் நிதிப் பரிசுகளை பெற்றுள்ளார். ஒரு மில்லியன் டாலர் சன்மானம் மற்றும் இங்கிலாந்து விசாவை பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கையோடு இருந்துள்ளார். ஈரானின் முக்கியமான இடங்களின் புகைப்படங்களை அவர் மொசாட் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இணையதளம் மூலமாக ஆள்சேர்ப்பு நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டதாக ஈரான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் தன் மீதான உளவு குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளார்.இதனை தொடர்ந்து ஈரான் அலி அர்தெஸ்தானியை தூக்கிலிட்டுள்ளது. ஆனால் அவர் எங்கு, எப்போது கைது செய்யப்பட்டார் என்பது உள்ளிட்ட விவரங்களை ஈரான் வெளியிடவில்லை.
