சென்னை: அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 38வது நினைவுநாளையொட்டி நேற்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை, மெரினா கடற்கரை அருகே உள்ள அவரது சமாதிக்கு ஊர்வலமாக சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில், உறுதியேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவை சேர்ந்த ஒரு பிரிவினர் காலை 11 மணிக்கு சென்னை, கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
* பெரியார் நினைவுநாள்: எடப்பாடி டிவிட்
பெரியாரின் 52வது நினைவுநாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி, திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று, மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதி பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
