திண்டுக்கல், டிச. 20: திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான கோட்டை குளம் இருந்து வருகிறது. இந்த குளத்தில் நேற்று காலை 38 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், எஸ்ஐ முனியம்மாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் இது கொலையா அல்லது குளிக்கும் போது தவறி விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
