- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எங்களுக்கு
- முதல்வர்
- மு.கே ஸ்டாலின்
- பிரதமர் மோடி
- சென்னை
- திருப்பூர்
- கோயம்புத்தூர்
- ஈரோடு
- கரூர்
சென்னை: இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரியால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் ரூ.60 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், குறிப்பிடத்தக்க ஒன்று உலக நாடுகள் மீது அதிரடி வரிகளை விதிப்பது. சீனா, கனடா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிகளவு வரிகளை அவர் விதித்து வருகிறார். பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது முதலில் 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். பின்னர், உக்ரைன் மீது போர் நடத்திவரும் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வதாகக் குற்றஞ்சாட்டி கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி முதல் மேலும் 25 சதவீத வரியை விதித்தார். இதனால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருள்கள் மீது அமெரிக்காவில் தற்போது 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை காரணமாக இரு நாடுகளிடையேயான உறவு சற்று பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வரி விதிப்பு காரணமாக, சீனா உள்பட பிற நாடுகளுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தும் நடவடிக்கையை இந்திய மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செய்யப்படும் ஏற்றுமதி கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்தநிலையில், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் ரூ.60 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே இதுகுறித்து சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி துறைகளில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் குறித்து அவசரமாகவும், கவலையோடும் இதை எழுதுகிறேன். தமிழ்நாடு, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை துறை ஏற்றுமதியின் அடித்தளமாக விளங்குகிறது, நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் 28 விழுக்காடு அளவிற்கு பங்களிப்பினை வழங்குவதுடன், சுமார் 75 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணி ஏற்றுமதியிலும் 40 விழுக்காடு அளவிற்கு முக்கிய பங்காற்றி, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அமெரிக்க வரிவிதிப்பினால் தற்போது வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடு என்பது வெறும் பொருளாதார பின்னடைவு மட்டுமல்ல; ஈடுசெய்ய முடியாத சமூக இழப்பினை ஏற்படுத்தும் மாபெரும் சவாலாகும்.
இந்தியாவின் பின்னலாடை தலைநகரமான திருப்பூரில் உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டர்களில் ஏற்றுமதியாளர்களுக்கு 15,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது, நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை கட்டாய உற்பத்தி குறைப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, புதிய ஆர்டர்களும் கவலை அடையும் அளவிற்கு குறைந்து வருகிறது.
திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் 60 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகின்றன.
தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த வரியின் காரணமாக, ஏற்றுமதியாளர்கள் லாபத்தை குறைத்து, தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக பெருமளவில் தள்ளுபடிகளை வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இது அவர்களின் போட்டித்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை குலைக்கும் வகையில் உள்ளது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. ஏற்கனவே இந்த துறைகள் பணி இழப்புகளையும், ஊதிய ஒத்திவைப்புகளையும் சந்தித்து வருகின்றன. இது சமூகத்தில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி அச்சுறுத்துகிறது.
இந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் வகையில், சர்வதேச இறக்குமதியாளர்கள், தங்களது ஆர்டர்களை வியட்நாம், வங்கதேசம் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலுள்ள போட்டியாளர்களிடம், அங்கு வரிவிதிப்பினால் கிடைக்கும் நன்மையைக் கருத்தில் கொண்டு விரைவாக வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக, சர்வதேச சந்தை வாய்ப்புகளை இழந்து, மீண்டும் வாய்ப்புகளை திரும்பப் பெறுவது என்பது பெருத்த சவாலாக இருக்கும். இது நமது இளைஞர்களின் குறிப்பாக பெண்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலான, நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
இந்த சூழலில், இந்திய-அமெரிக்க இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்த வரிச் சிக்கலை விரைவில் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். விரைவான தீர்வின் மூலமாக நமது ஏற்றுமதியாளர்களின் வணிக நிலையை மீட்டெடுப்பதோடு, உலக அளவில் உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்திட இயலும். எனவே, நிலையான வர்த்தகத்தை வளர்த்தெடுப்பதற்கும், உள்நாட்டு தொழில்கள் மற்றும் வேலைகளைப் பாதுகாப்பதற்கும் பிரதமர் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் மீது நம்பிக்கையுடன் இருப்பதால், அமெரிக்க வரிவிதிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
n அமெரிக்க வரிவிதிப்பு ஈடுசெய்ய முடியாத சமூக இழப்பினை ஏற்படுத்தும்.
n பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன.
n இந்தியாவின் பின்னலாடை தலைநகரமான திருப்பூரில் 30 விழுக்காடு வரை கட்டாய உற்பத்தி குறைப்பு.
n புதிய ஆர்டர்களும் கவலை அடையும் அளவிற்கு குறைந்து வருகிறது.
n வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகின்றன.
