×

காவலர் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 185 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

 

சென்னை: காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து பெறப்பட்ட 185 குறைதீர் மனுக்கள் குறித்து விவர ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையாளர் உத்தரவிட்டார். சென்னை காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின்பேரில், நடப்பாண்டு 01.01.2025 முதல் 10.11.2025 வரையில் காவலர் குறை தீர் முகாமில் மனு கொடுத்து நிர்வாக தாமதம் குறித்தான ஆய்வு செய்து நிலுவையில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து மனுக்கள் பெறுவதற்காக இன்று காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அதன்பேரில், இன்று வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்‘‘ சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 02 காவல் உதவி ஆணையாளர், 14 காவல் ஆய்வாளர்கள், 37 உதவி ஆய்வாளர்கள், 129 காவல் ஆளிநர்கள் மற்றும் 03 அமைச்சுப் பணியாளர்கள் என மொத்தம் 185 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்றார். இம்முகாமில் சென்னை காவல் ஆணையாளர் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் விஜயேந்திர பிதாரி, துணை ஆணையாளர்கள் D.N.ஹிரிகிரன் பிரசாத், (நலன் மற்றும் எஸ்டேட்), G.சுப்புலட்சுமி, (நிர்வாகம்), B.கீதா (தலைமையிடம்), மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,Chennai Police ,Commissioner ,Special Guard Dispute Resolution Camp ,
× RELATED கடலூர் மீன்பிடி துறைமுக பகுதியில் இன்று காலை மீன் விற்பனை கலை கட்டியது