சென்னை: வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு என்பது இந்த மாதமும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 17ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை இறங்குவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 22ம் தேதி பவுனுக்கு ரூ.3680 வரை குறைந்து ஒரு பவுன் ரூ.92,320க்கு விற்றது. 23ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.92,000க்கும் விற்றது. இது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து பவுன் ரூ.92,320க்கு விற்பனையானது. தொடர்ந்து, மாலையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.11,400க்கும், பவுனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு பவுன் ரூ.91,200க்கு விற்றது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.170க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 70 ஆயிரத்தும் விற்றது. இதற்கிடையில், வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்தது.
நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும், பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்றது. நேற்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.170 ஆகவும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
